1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:57 IST)

பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு! – பாஜக கண்டனம்!

மேகாலயாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கூட்டத்தில் பேச இருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய பெரும் கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தியாவின் பெருவாரி மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, மேகாலயாவிலும் ஆட்சியை பிடிப்பதற்காக மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளில் பாஜக வெளியிட்டுள்ளது.


பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மேகாலயாவின் துரா பகுதியில் பிப்ரவரி 24ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்கான முறையான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ள பி.எ.சங்மா அரங்கில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு அனுமதிக்க முடியாது என மேகாலயா அரசு தெரிவித்துள்ளது.

இது திட்டமிட்ட செயல் என பாஜகவினர் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிப்ரவரி 24ம் தேதி பிரதமர் மோடி பேசுவதை தடுக்க முடியாது என்றும், மாற்று இடத்தில் பிரச்சார கூட்டம் நடைபெறும் என்றும் பாஜக அறிவித்துள்ளது.