திங்கள், 16 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (16:40 IST)

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

Mamtha Banerji
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டம் நீடித்து வரும் நிலையில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இதுவே கடைசி முயற்சி என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
கொல்கத்தாவின் ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடை பெற்றன. மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரியும் கொல்கத்தா நகரில் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படியும், அவர்கள் பணிக்கு திரும்பவில்லை.
 
போராட்டம் 35 நாட்களுக்கு மேல் நீடிக்க, அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசு மருத்துவர்களை சமாதானம் செய்து பணிக்கு திருப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பகுதியாக, இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவர்கள் போராடிய இடத்துக்கே சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, "இது என்னுடைய கடைசி முயற்சி" என்று தெரிவித்தார்.
 
இந்த நிலையில், இன்று மீண்டும் மம்தா பானர்ஜி மருத்துவர்களை 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் இல்லத்தில் நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடியாது, ஆனால் பேச்சுவார்த்தையின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினரின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது குறித்து மருத்துவர்கள் பரிசீலித்து வருவதாக தெரிகிறது
 
Edited by Mahendran