வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (22:40 IST)

ராகுல் பிரதமர் வேட்பாளர்: மு.க.ஸ்டாலின் கருத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழா கூட்டத்தில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றும், இதனை மற்ற கூட்டணி கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ராகுல் பிரதமர் என்பதை காங்கிரஸ் கட்சி தலைவர்களே இன்னும் அறிவிக்காத நிலையில் முந்திரிக்கொட்டை போல் ஸ்டாலின் முந்திக்கொண்டு அறிவித்து எதிர்க்கட்சிகள் இடையே குழப்பம் விளைவித்துள்ளதாக பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் கருத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: எதிர்கட்சிகளுக்கான அணியின் பிரதமரை மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகுதான் முடிவு செய்யவேண்டும். ஒருதலைபட்சமான அறிவிப்பு தவறான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்திவிடும். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் மற்றக் கட்சிகளுக்கும் உடன்பாடு இல்லை. தற்போதே பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது என்பது முதிர்ச்சி இல்லாத ஒன்று. அது எதிர்கட்சிகளை சிதைத்துவிடும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சித்தாராம் யெச்சூரி இதுகுறித்து கூறியபோது, ‘மு.க.ஸ்டாலினுடைய கருத்துடன் நாங்கள் ஒத்துப் போகவில்லை. அது அவருடைய கருத்து. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே யார் பிரதமர் என்பதை முடிவு செய்யமுடியும்’ என்று தெரிவித்தார்.