வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (12:06 IST)

எல்லாமே பாடிதான.. எடுத்துட்டு போங்க! – அலட்சியம் செய்த மருத்துவர் டிஸ்மிஸ்!

மத்திய பிரதேசத்தில் உடல்நல குறைவால் இறந்த மகனுக்கு பதிலாக முதியவர் ஒருவரின் உடலை எடுத்து செல்ல வற்புறுத்திய டாக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருக்கலாம் என அவரை பரிசோதித்து கொரோனா வார்டிற்கு மாற்றியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். அதற்கு பிறகு இளைஞர் குறித்த தகவல்கள் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வரவில்லை.

இதனால் இளைஞரை காண வேண்டுமென மருத்துவமனை வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர். ஆனால் இளைஞர் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர் சவக்கிடங்கிலிருந்து அவரது உடலை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். சவக்கிடங்கில் இளைஞரின் பெயரில் இருந்த சவத்தின் துணியை நீக்கி பார்த்தபோது இளைஞருக்கு பதிலாக அதில் வேறு யாரோ முதியவர் இருந்துள்ளார். இதைக்கண்டு உடல்கள் மாறியுள்ளதாக மருத்துவரிடம் அவர்கள் புகார் அளித்ததற்கு மதிப்பளிக்காமல் பேசிய அந்த மருத்துவர் முதியவர் உடலை எடுத்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள இளைஞரின் குடும்பத்தினர் இதுவரை இளைஞருக்கு சோதனைகள் செய்ததற்கான ஆவணங்களை கூட அளிக்கவில்லை என கூறியுள்ளனர். இதன் அடிப்படியில் போலீஸார் எடுத்த நடவடிக்கையின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இளைஞருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.