1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 மார்ச் 2020 (16:07 IST)

கேரளாவில் மது கிடைக்காமல் அதிகமாகும் தற்கொலைகள் – முதல்வர் அதிரடி அறிவிப்பு !

கேரளாவில் மது கிடைக்காமல் தற்கொலைகள் அதிகரித்து வருவதால் மருத்துவரின் பரிந்துரை சீட்டோடு வருபவர்களுக்கு மது அளிக்கும்படி கேரள அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் சரக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 5 நாட்களாக மது கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் மதுவுக்கு அடிமையானவர்கள். இந்நிலையில் மது கிடைக்காத அதிருப்தியில் இதுவரை கேரளாவில் 7 பேர் வரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்திலும் அது போல சில தற்கொலைகள் நடந்துள்ளன. இது கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்த விஷயம் இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ள நிலையில் கேரள அரசு, மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்கலாம் என முடிவெடுத்துள்ளது. ஆனால் இதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் தடைபோட்டுள்ளது. அதுபோல கேரள மருத்துவர்களிடம் யாருக்கும் மதுவை பரிந்துரைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.