வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (09:00 IST)

ஸ்ரீசாந்த் வீட்டில் பயங்கர தீவிபத்து: மனைவி குழந்தைகளுடன் நூலிழயில் உயிர் தப்பினார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அவரும் அவருடைய குடும்பத்தாரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் 
 
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்ரீசாந்த் ஆயுள் தடை விதிக்கப்பட்டு அதன்பிறகு அந்த தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்ரீசாந்த் தற்போது மீண்டும் இந்திய அணி அல்லது ஐபிஎல் அணிகளில் இடம் பெற முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவருடைய கொச்சி வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
 
ஸ்ரீசாந்த் வீட்டில் அதிகாலை 2 மணிக்கு தீ பிடித்ததால் தீ விபத்தை அவரது குடும்பத்தினர் முதலில் கவனிக்கவில்லை. இருப்பினும் திடீரென சுதாரித்து எழுந்த ஸ்ரீசாந்த், மனைவி மற்றும் குழந்தைகளுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் நூலிழையில் உயிர் தப்பித்தார் 
 
இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஸ்ரீசாந்த் வீட்டின் முன் பக்க அறை மற்றும் இரண்டு அறைகள் முற்றிலும் எரிந்து நாசமானதாகவும், ஏராளமான பொருள்கள் சேதம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இருப்பினும் ஸ்ரீசாந்த் மனைவி மற்றும் குழந்தைகள் உள்பட யாருக்கும் எந்த காயமும் இல்லை என்றும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ஸ்ரீசாந்த் தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது