1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (08:46 IST)

தங்க கடத்தல் வழக்கில் திடுக்... துபாயில் பணம் வாங்கிய பினராயி??

கடந்த ஆண்டு நாட்டையே உலுக்கிய கேரள தங்க கடத்தல் வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித், கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். 
 
ஆனால் தற்போது அவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக கூறி கேரள அரசியலை புறட்டிப்போடும் சில தகவல்களை அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, தங்க கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது. அவர் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது. 
 
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு துபாயில் வைத்து பினராயி விஜயனுக்கு பணம் கொடுக்கப்பட்டது என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை கிளப்பிய தங்க கடத்தல் விவகாரத்தில், பல்வேறு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதால் இவ்வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது.