தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி, அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "இது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம். மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளை களைந்து, ஒன்றாக இணைந்து இதை எதிர்த்துப் போராடுவோம்.
டெல்லியிலும் இதற்குரிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதையே முடிவாக எடுக்கிறார்கள். எனவே, மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம். நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி, அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும்."*என தெரிவித்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விருப்பம் தெரிவித்ததன் பேரில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
Edited by Mahendran