1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (12:50 IST)

ராகுல்காந்தியால் 10 வரிகள் பேச முடியுமா? – சவால்விட்ட ஜே.பி.நட்டா!

குடியுரிமை சட்டம் குறித்து தொடர்ந்து 10 வரிகள் ராகுல் காந்தியால் பேச முடியுமா என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சவால் விடுத்துள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வந்த அமித்ஷா தற்போது உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கிறார். மேலும் அவரது தலைவர் பதவிக்கான காலம் முடிந்த நிலையில் பாஜகவுக்கு புதிய தலைவராக ஜே.பி நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் பல்வேறு திட்டமிடல்களை செய்து வரும் ஜே.பி.நட்டா குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரங்களிலும் பேசி வருகிறார். சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவான கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா ”குடியுரிமை சட்டம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. குடியுரிமை சட்டம் யாரையும் நாட்டை விட்டு அனுப்புவதற்காக அல்ல என்பதை மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் இஸ்லாமிய மக்களிடையே தவறான கருத்துகளை பரப்பி வருகிறது. குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து 10 வரிகள் பேசிவிட்டால் அவர் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என கூறியுள்ளார்.