1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (06:50 IST)

ப.சிதம்பரம் கைதுக்கு இந்த பெண் தான் முக்கிய காரணமா?

நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாவதற்கு ஒரு பெண் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றார் என்றால் நம்ப முடியுமா? ஆனால் அதுதான் உண்மை. அவர்தான் இந்திராணி முகர்ஜி. இவரது வாக்குமூலம் தான் இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது வரை சென்றுள்ளது. 
 
கடந்த 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்கள் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தனர். ஆனால் நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இதுகுறித்து அணுகியபோது அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியதால் 4 கோடியே 62 லட்சம் ரூபாய் அளவிற்கு பங்குகளை விற்க அனுமதிக்கப்பட்டது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழை முறைகேடாக பெற்று தருவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் பேரம் நடந்ததாகவும், இந்த காரியத்தை முடிக்க பெரும் தொகை கமிஷனாக பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
 
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான பீட்டர் முகர்ஜியும் இந்திராணி முகர்ஜியும் மற்றொரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணி சம்மதம் தெரிவித்தார். இதனால் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்திராணி சிபிஐயிடம் அளித்தார். இந்த வாக்குமூலத்தில், டெல்லி ஹயாத் நட்சத்திர ஓட்டலில் தன்னையும் பீட்டர் முகர்ஜியையும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்ததாகவும், பத்துலட்சம் டாலர் லஞ்சம் கேட்டதாகவும் தொழிலில் வளர தமது மகனுக்கு உதவும்படி அவர் கேட்டுக் கொண்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்தார். இந்த வாக்குமூலம்தான் தற்போது ப.சிதம்பரத்திற்கு எதிரான பலமான ஆதாரமாக உள்ளதாக சிபிஐ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனமான ASCPL மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் சுமார் 3 கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு ஐஎன்எக்ஸ் மீடியாவின் முதலீட்டை பெற்றதாக பில்கள் தயாரிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் இந்த தொகை அந்நிறுவனத்திற்கு வேறு முறைகளில் திருப்பப்பட்டதாகவும், இந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய முதலீட்டு வளர்ச்சி வாரியம் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே இதுகுறித்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரம் கைதுக்கு பின் இந்த வழக்கு எவ்வாறு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்