வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (06:27 IST)

புலிகள் தடை விவகாரம்: ஸ்டாலின் - காங்கிரஸார் திடீர் மோதல்

சமீபத்தில் ஐரோப்பிய யூனியன் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கியது. இதனையடுத்து இந்திய அரசும் தடையை நீக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 



 
 
இதுகுறித்து காங்கிரஸ் மாநில செயற்க்குழு உறுப்பினர் கே.எஸ்.அழகிரி கூறியபோது "விடுதலைப்புலிகளால் ஐரோப்பா யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. ஆனால் இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம். காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல் விடுதலைப் புலிகளை இலங்கை தமிழர்களின் நலனோடு இணைக்ககூடாது. தீவிரவாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது "வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்" என்று பிரகடனப்படுத்திய தி.மு.க.வுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
 
இலங்கை தமிழர்களின் நலனை பாதுகாக்க, அவர்களுக்காக போராட யாழ்பாணத்தில் பெரியவர் சம்பந்தம் தலைமையில் மிக வலுவான ஜனநாயக இயக்கம் உயிர்ப்போடு உள்ளது. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசின் நிலையே தி.மு.க.வின் நிலை என கருணாநிதி தெளிவாக கூறியுள்ளார். எனவே, தி.மு.க.வின் நிலையில் மாற்றம் வரும் என நான் நினைக்கவில்லை. ஒருகாலத்தில் கருணாநிதியையே  அப்புறபடுத்திவிட்டு அந்த இடத்தில் வேறு ஒருவரை அமர வைக்க விடுதலைப் புலிகள் முயற்ச்சித்ததாக கருணாநிதியே அறிவித்திருக்கிறார்.
 
அதனால் தி.மு.க.வே பிளவுபட்டது ஸ்டாலினுக்கு தெரியாதா? இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காக போராட தாய் தமிழகம் தயாராக உள்ளது. அதுவும் ஜனாநாய வழியில். அதனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க கூடாது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
கூட்டணி கட்சியான திமுகவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது