1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (13:16 IST)

ஜெயிச்சதுக்கு வரிய கட்டுங்க!; ஆன்லைனில் விளையாடிய 10 ஆயிரம் பேருக்கு வருமானவரி நோட்டீஸ்!

ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்ற நபர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் என 10 ஆயிரம் பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியா முழுவதும் ஆன்லைன் விளையாட்டுகள் பல பிரபலமாக உள்ள நிலையில் அவற்றில் கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டுகள் அறிவுசார் விளையாட்டுகள் என அவ்விளையாட்டு நிறுவனங்கள் கூறி வந்தாலும், சூதாட்டங்கள் என புகார்களும் இருந்து வருகிறது.

இந்தியாவில் இதுபோன்று ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் வெற்றி பெறுபவர்களுக்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. வருமானவரி சட்டம் 1961 பிரிவு 194 பி லாட்டரி சீட்டு, புதிர் விளையாட்டுகளுக்கு வருமானவரி செலுத்துவதை உறுதி செய்கிறது.

ஆனால் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பணம் வெற்றி பெற்றவர்களுக்கு 30 சதவீதம் வரி பிடித்தம் செய்யவில்லை என சமீபத்தில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்கள் மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Edit by Prasanth.K