வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:19 IST)

8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் இனி இல்லை: நாடாளுமன்றம் ஒப்புதல்

8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனால் இனி 5வது மற்றும் 8வது பாஸ் ஆனால் தான் அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும்.
8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கும் திருத்தங்களுடன், கடந்த 2009-ம் ஆண்டு ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, கொண்டுவரப்பட்டது.
 
அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் கல்விதரம் பாதிக்கப்படுவதாக  பள்ளிகள் புகார் எழுப்பின. 
 
இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.
 
இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது. 
 
மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
 
இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.
 
இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறவது சரியல்ல. போட்டி உணர்வை உருவாக்குவதே இந்த சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என தெரிவித்தார்.