1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (10:16 IST)

விஜய் மல்லையாவின் 6 ஆயிரம் கோடி சொத்து பறிமுதல் செய்ய முடிவு

வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ.6 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது.
 

 
‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார். அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 
விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் அண்மையில் அறிவித்தது.இதனிடையே, பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா அளித்திருந்த காசோலைகள், அவரது வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன.
 
இந்நிலையில், மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சில மாதங்களுக்கு முன்பு முறைகேடு, மோசடி வழக்கு தொடர்பாக ரூ.1,411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தது. இந்நிலையில் மேலும் ரூ.6 ஆயிரம் கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது.
 
மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவை நீதிமன்றத்திலிருந்து பெற்று அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும் அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.