வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (20:55 IST)

பொருளாதாரம் மோசமானால் ஆகட்டும், நாட்டு மக்களின் உயிர் எனக்கு முக்கியம்: பிரதமர் மோடி

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்கும் நோக்குடன் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சற்றுமுன் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி எனக்கு நாட்டின் பொருளாதாரம் முக்கிய இல்லை என்றும் நாட்டு மக்களின் உயிர் தான் முக்கியம் என்றும் 21 நாட்கள் ஊரடங்கை நாம் கடுமையாக கடைபிடிக்கவில்லை என்றால் 21 வருடங்கள் பின்னோக்கி செல்ல நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
 
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் பொருளாதரம் மிக மோசமாக பாதிக்கும் என்பது எனக்கு தெரியும் என்றும், ஆனால்  இப்போதைய சூழ்நிலையில் பொருளாதாரத்தை விட நாட்டு  மக்களின் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம் என்றும் தெரிவித்தார்.
 
கொரோனாவை ஒவ்வொருவரும் அலட்சியப்படுத்தக்கூடாது என்றும் நாம் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு  என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படும் முடிவு என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
நீங்கள் வெளியே சென்று சந்திக்கும் ஒவ்வொரு நபரும் கொரோனாவை சுமந்து வருபவராக இருக்கலாம் என்றும் அதனால் ஒருவருக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு பல நூறு பேருக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளது என்றும் கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை என்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்று பிரதமர் மோடி தனது நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்