1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 மே 2020 (09:02 IST)

கொல்கத்தாவை நெருங்கிவிட்ட அம்பன் புயல்: 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று

கொல்கத்தாவை நெருங்கிவிட்ட அம்பன் புயல்:
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் பூரி மற்றும் கொல்கத்தா இடையே மையம் கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக அந்த பகுதியில் 106 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இந்த நிலையில் அம்பன் புயல் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மேற்குவங்கம் மற்றும் வங்கதேச அரசுகள் புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. 
 
மேற்கு வங்க மாநிலம் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையில் சுந்தரவனக் காடுகளுக்கு அருகே இன்று பிற்பகல் அல்லது மாலையில் புயல் கரையைக் கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 155 முதல் 165 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அதிகபட்சமாக 185 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
1999ஆம் ஆண்டுக்கு பின் மிகவும் வலுவான சூப்பர் புயல் இதுதான் என்றும், அதனால் அதிவேக காற்று காரணமாக பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், புயல் கரையை கடக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
இதுவரை கடலோர பகுதிகளில் இருந்து 3 லட்சம் பேர்களை மேற்கு வங்க அரசு வெளியேற்றியுள்ளதாகவும், இதில் 67 சதவீதம் பேர் தெற்கு 24-பர்கானாஸ் பகுதியையும், எஞ்சியவர்கள் வடக்கு 24-பர்கானாஸ், கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூரையும் சேர்ந்தவர்கள் என்றும், புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயாராக இருப்பதாகவும் மேற்குவங்க அரசு தெரிவித்துள்ளது