1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (15:22 IST)

ரயில்வே வேலைக்கு நிலம்.! லாலுவின் மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

robri devi
ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகள் மிசா பாரதி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 
 
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது இந்திய ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பதவிகளுக்கு பல்வேறு நபர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாகப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
 
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, அவரது மகள் மிசா பாரதி மீது டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவ்வழக்கு விசாரணையை ஜனவரி 16-ம் தேதி பட்டியலிட்டுள்ளது.
 
ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் பணமோசடி தொடர்பாக அமித் கத்யால் நவம்பர் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாலு பிரசாத் மற்றும் அவரது மகனும், பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.