1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (07:56 IST)

உங்களுக்கு போராட்டம் பண்ண உரிமை இல்லை – மத்திய அரசு எச்சரிக்கை!

இன்று நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்து வருவதை எதிர்த்தும், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தோ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., முதலிய 10 தொழிற் நிறுவனங்கள் சேர்ந்து மத்திய அரசுக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மத்திய பணியாளர் நலத்துறை அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் “ஊழியர்கள் சங்கம் வைத்துக்கொள்ள உரிமை அளித்திருக்கிறதே தவிர போராட்டம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட அவர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கப்படவில்லை.

ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய தற்போதைய விதிமுறைகளில் அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கும் ஆளாக நேரிடும்” என கூறப்பட்டுள்ளது.