1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (09:27 IST)

நாங்க என்ன சொன்னா நீங்க என்ன செய்றீங்க! – கேரளாவுக்கு மத்திய அரசு கடிதம்!

இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்த மத்திய அரசு அனுமதித்த நிலையில் கேரளாவின் அறிவிப்பிற்கு மத்திய அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20 ஆன இன்றுமுதல் அன்றாட பணிகளை மேற்கொள்ள சில தளர்வுகளை மாநில அரசுகள் விவாதித்து அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என தமிழக அரசு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

இந்நிலையில் கேரளாவில் உணவகங்கள் முழுமையாக இயங்குவதற்கும், மாநிலத்திற்குள் பேருந்துகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் கேரள அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பேருந்து வசதியை மாநிலம் முழுவதுமாக செயல்படுத்துவது கொரோனா தடுப்பு நடவடிக்கையை நீர்த்து போக செய்துவிடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கை முழுவதுமாக தளர்த்தியது போன்ற அறிவிப்புகளை வெளியிடாமல் அத்தியாவசிய தளர்வுகளை மட்டும் அரசு வெளியிட வேண்டும் என உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.