வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (16:33 IST)

நீரிழிவு நோயாளிகளுக்கு எச்சரிக்கை.! கால்களை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Diabetics
மிகவும் பிரசித்தி பெற்ற பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (பிஎம்ஜே) வெளியான நீரிழிவு நோயாளிகள் குறித்து அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரையில், நீரிழிவு நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே தங்கள் கால்களை பரிசோதிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்களைக் காப்பாற்றுங்கள், தொடர்ந்து நடை பயிற்சி செய்யுங்கள்’’ என்ற விழிப்புணர்வு இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டர் விஜய் விஸ்வநாதன், நிர்வாக இயக்குநர் & தலைமை மருத்துவர், நீரிழிவு நோய்க்கான எம்வி மருத்துவமனை மற்றும் பேராசிரியர் எம் விஸ்வநாதன், நீரிழிவு ஆராய்ச்சி மையம், ராயபுரம் ஆகியோர் இணைந்து 2022-ம் ஆண்டு கால்களைக் காப்பாற்றுங்கள், நடைப் பயிற்சியைத் தொடருங்கள் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை இந்தியா முழுவதும் இந்தியாவில் நீரிழிவு நோய் குறித்த ஆய்வு செய்யும் தேசிய ஆராய்ச்சி சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்டிஐ) இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 
 
உலகம் முழுவதும் உள்ள நீரிழிவு நோய் சிகிச்சை அளிக்கும் நிபுணர்களை உள்ளடக்கிய மையமாக ஆர்எஸ்எஸ்டிஐ திகழ்கிறது. நீரிழிவு நோயாளிகள் கால்களை இழப்பதை முன்கூட்டியே தடுப்பதற்கான வாய்ப்புள்ளவர்களைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கு சிகிச்சைகளை முன்கூட்டியே மேற்கொள்வதாகும். நீரிழிவு நோய் சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் இந்த ஒரு மாத விழிப்புணர்வு பிரசாரத்தை இந்தியா முழுவதும் மேற்கொண்டு நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களைக் காத்துக் கொள்ள குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்வதை வலியுறுத்தியுள்ளனர்.
 
இந்த பிரசாரத்தில் மொத்தம் 54 ஆயிரம் நீரிழிவு நோயாளிகளின் கால்கள் பரிசோதிக்கப்பட்டன. டாக்டர் விஜய் விஸ்வநாதன் மற்றும் அவரது குழுவினர் அளித்த தகவலில் 33,259 பங்கேற்பாளர்கள் பற்றிய விவரம் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் கட்டுரையாக வெளியாகியுள்ளது. மருத்துவக் குழுவினர் அளித்த தகவலின்படி நான்கில் ஒரு நீரிழிவு நோயாளியின் கால்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக புற தமனி நோய் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆபத்துகளை இவர்கள் கொண்டிருப்பதாக ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற ஆபத்து காரணிகளான டிஎப்யு வரலாறு அல்லது காலின் கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்க வேண்டிய நிலை அல்லது முற்றிய நிலையிலான சிறுநீரக பாதிப்பை கொண்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளின் கால்கள் குறித்த சர்வதேச செயல் குழு 2023-ல் வகுத்தளித்த வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த தரவுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து டாக்டர் விஜய் விஸ்வநாதன் கூறுகையில், அதிக ஆபத்து நிறைந்த பாதங்களைக் கொண்ட மக்களில் நான்கில் 3 பேருக்கு சிறுநீரகம் மற்றும் விழித்திரை பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளார். குதிகால் பிளவுகள் சாதாரணமானவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு 4.6 மடங்கு அதிகம் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  45 வயதுக்கு குறைந்தவர்களின் காலில் ஆணி மற்றும் புகைபிடிக்கும் பழக்கம், மிகவும் மோசமான கிளைசெமிக் கட்டுப்பாடு ஆகியன ஆண்களிடையே அதிகமாக இருப்பதும் அதிக ஆபத்து நிறைந்த கால்கள் உருவாகக் காரணமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
இந்தியா உட்பட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நீரிழிவு மற்றும் கால்கள் பாதிப்பு சார்ந்த பிரச்சினைகள் உடையவர்களால் பொருளாதாரத்தில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்களைக் காப்பாற்றுவதில் பின்பற்றப்படும் அலட்சியப் போக்கு, செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் நடப்பது போன்ற காரணங்களால் காலில் காயம் ஏற்பட்டு காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயங்களைக் குணப்படுத்துவது நமது மருத்துவ முறைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காயங்களைக் குணப்படுத்தும் மையங்கள் இந்த விஷயத்தில் மிக முக்கிய பங்களிப்பை அளிக்க முடியும் என்றும் நவீன மருத்துவ முறைகள் இதுபோன்ற தீவிரமான காயங்களுக்கு தீர்வு அளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விழிப்புணர்வு, ஆரம்ப நிலை மருத்துவ பரிசோதனையின் அவசியம் மற்றும் காயங்களை விரைவாகக் குணப்படுத்தும் நடவடிக்கைகள் இப்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இத்துறை வல்லுநர்களும் மிகச் சிறந்த நடைமுறைகளை பின்பற்றி நீரிழிவு நோயாளிகளின் கால்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
முறையான உரிய மருத்துவ சிகிச்சைகள், ஆரம்ப நிலையில் நோய்களைக் கண்டறிவது உள்ளிட்ட நீரிழிவு நோய் தடுப்பு நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கால்களை பாதுகாக்க முடியும் என்று டாக்டர் விஜய் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.