1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (11:41 IST)

மனைவியை ரகசியமாக படம் பிடித்த டிவி!!: அதிர்ச்சியில் உறைந்த கணவர்!?

கேராளாவில் பெண் ஒருவரை டிவி ரகசியமாக படமெடுத்து அவரது கணவருக்கே அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேராளாவில் கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்திருக்கின்றனர் ஒரு தம்பதியர். கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மனைவி மட்டும் கோழிக்கோட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள கணவருக்கு அவரது மொபைலில் சில வீடியோக்கள் வந்திருக்கின்றன. அதை டவுன்லோட் செய்து பார்த்தவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

அதில் அவரது மனைவி உடை மாற்றுவது மற்றும் சில அந்தரங்க வீடியோக்களும் இருந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக தன் மனைவிக்கு போன் செய்து கேட்டுள்ளார். யாரோ வீட்டுக்குள் கேமரா ஒளித்து வைத்திருக்கலாம் என்ற பயம் ஏற்பட்டுள்ளது வீட்டில் உள்ளவர்களுக்கு! உடனடியாக இதுகுறித்து கேரளா போலீஸில் புகார் அளித்துள்ளனர். சைபர் க்ரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்த தொடங்கினர்.

வீட்டை பரிசோதித்த போது அந்த பெண்ணின் அறையில் எந்த கேமிராவும் இருக்கவில்லை. ஆனால் அறையில் அந்த பெண்ணை வீடியோ பதிவு செய்யப்பட்ட கோணத்தில் ஒரு ஸ்மார்ட் டிவி இருந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது “அந்த டிவியை வாங்கி சில மாதங்களே ஆனதாகவும், அதன் மூலம் தன் கணவருடன் ஸ்கைப் மூலம் பேசுவதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் டிவியில் உள்ள கேமராவில்தான் பெண்ணின் வீடியோ பதிவாகி கணவருக்கு சென்றிருக்கிறது என்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் டிவி ஆஃப் செய்திருக்கும்போதும் எப்படி காட்சிகளை பதிவு செய்யும், முக்கியமாக பெண்ணின் அந்தரங்க காட்சிகளை மட்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. யாராவது வெளிநாட்டில் உள்ள கணவரின் கணினியையோ அல்லது மொபைலையோ ஹேக் செய்து இதை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் உபயோகிக்கும் பொருட்கள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதற்கான ஒரு எடுத்துக்காட்டாய் இந்த சம்பவம் அமைந்துவிட்டது.