சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (15:25 IST)

5 மணி நேரமாக குளத்தில் மிதந்த பிணம்..? தொட்டவுடன் உயிர்வந்த ஆச்சர்யம்! – ஆந்திராவை அதிரவைத்த குடிமகன்!

Drunk man on the pond
ஆந்திராவில் குளம் ஒன்றில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பிணம் போல மிதந்தவர் காவலர்கள் வந்து தொட்டதும் எழுந்து சென்ற சம்பவம் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



மதுப்பிரியர்களின் உலகமே தனித்துவமானது. சிலர் குடித்து விட்டால் வீரர்களாகி விடுவர், சிலரோ குழந்தைகள் போல மென்மையாக மாறி விடுவார்கள். வேறு சிலரோ மது அருந்திவிட்டாலே சுற்றி இருப்போர் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் ஏதாவது சம்பவம் செய்பவர்களாய் இருப்பர். அப்படியான ஒரு குடிமகன் செய்த சம்பவம்தான் ஆந்திராவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் உள்ள ரெட்டிபுரம் பகுதியில் ஹனுமக்கொண்டா என்ற குளம் ஒன்று உள்ளது. இன்று காலை அதில் ஒரு மனிதன் மிதந்து கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். காலை 7 மணி முதலாக நீண்ட நேரமாக அந்த மனிதன் உடல் மிதந்து கொண்டிருந்த நிலையில், அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு போன் செய்து குளத்தில் பிணம் ஒன்று மிதப்பதாக கூறியுள்ளார்கள்.


உடனடியாக சம்பவ இடம் விரைந்த போலீஸார் அங்கு பார்த்தபோது நடுமதியம் 12 மணி அளவிலும் அந்த உடல் மிதந்து கொண்டே இருந்துள்ளது. பின்னர் போலீஸாரும் அது இறந்த உடல்தான் என எண்ணி கரைக்கு இழுத்து வர முயன்றபோது திடீரென அசைந்த அந்த மனிதன் எழுந்து நிற்கவும், பொதுமக்களும், போலீஸும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

யார் அவர் என போலீஸ் விசாரித்தபோது, தான் அருகே உள்ள குவாரி ஒன்றில் 10 நாட்களாக வேலை செய்து வருவதாகவும், தினசரி 12 மணி நேரம் வேலை செய்ததால் ஏற்பட்ட உடல் களைப்பை போக்க மது அருந்திவிட்டு குளத்தில் குளிக்க இறங்கியதாகவும், ஆனால் களைப்பு காரணமாக அப்படியே தூங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை சுமார் 5 மணி நேரமாக அந்த குடிமகன் எந்த அசைவும் இல்லாமல் குளத்தில் மிதந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K