1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (12:42 IST)

3 வயது சிறுமி கடத்தல்; 6 மணி நேரத்தில் மீட்ட பலே போலீஸ்

திருப்பதியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுமியை போலீஸார் 6 மணி நேரத்தில் மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

திருப்பதி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு சினிமா திரையரங்கில் பவன்குமார் மற்றும் அவரது மனைவி ரேகாபிரியா ஆகியோர் திரையரங்கை சுத்தப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தம்பதியர் இருவரும் திரையரங்கிற்குள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களது 3 வயது குழந்தை திரையரங்கின் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தது. தம்பதியர் திரையரங்கை விட்டு வெளியே வந்த போது, குழந்தை காணாமல் போயுள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர் 3 வயது சிறுமியை கொண்டு சித்தூர் பேருந்தில் ஏறிய காட்சி பதிவாகியுள்ளது. இதை கண்ட போலீஸார், அந்த வாலிபரின் அடையாளம் குறித்து சித்தூர் போலீஸிடம் தகவல் கொடுத்தனர்.

சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவிக்களை ஆராய்ந்த சித்தூர் போலீஸார், ஒரு வாலிபர் சிறுமியை தூக்கிச் செல்லும் காட்சியும், சிறிது நேரத்திற்கு பின் அந்த வாலிபர் வேலூர் பேருந்தில் ஏறியதாகவும் தெரியவந்தது. இதன் பிறகு போலீஸார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தெருக்களில் சிறுமியை தேடினர். அப்போது மீட்டூர் என்ற இடத்தில் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு அந்த சிறுமியை மீட்டு திருப்பதி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பின்பு சிறுமி, பெற்றோரிடம் ஒப்படக்கப்பட்டது. காணாமல் போன குழந்தை 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.