1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (13:33 IST)

வட சென்னையில் பிரத்யேகமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும்..! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி..!

udayanithi
வட சென்னையில் பிரத்யேகமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
 
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.
 
இந்நிலையில் வடசென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் கலாநிதி வீராச்சாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை சுட்டிக்காட்டி பேசினார். வருகிற மக்களவை தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தால், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் உதயநிதி உறுதி அளித்தார்.
 
கொளத்தூர் தொகுதியில் மட்டும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் வட சென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.6,300 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கருணாநிதியை போலவே, சொன்னதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் முதல்வர் ஸ்டாலின் என்று உதயநிதி கூறினார். வட சென்னை கணேசபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் வட சென்னையில் பிரத்யேகமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
 
பட்டா பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என  தெரிவித்த அவர், தேர்தல் முடிந்தவுடன், பட்டா பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறினார். சட்டப்பேரவை தேர்தலில், ஒட்டுமொத்த சென்னையும், திமுகவுக்கு வாக்களித்தது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.