வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2019 (09:02 IST)

பிரச்சாரத்திற்கு வருகிறார் விஜயகாந்த் – உற்சாகத்தில் தொண்டர்கள் !

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்த்  சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.இதனையடுத்து மனைவி பிரேமலதாவுடன் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கேப்டனின் உடல்நலக்குறைவால் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மனமுடைந்தனர். அவர்களை உற்சாகப்படுத்த அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது விஜயகாந்தின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆறுதல் படுத்தி  வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் பிப்ரவரி 16- ஆம் தேதி சென்னைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர் தொண்டர்கள். ஆனாலும் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை இதுவரை சந்திக்கவில்லை. தேமுதிக சம்மந்தமாக பிரேமலதா விஜயகாந்தும் எல் கே சுதிஷூம் மட்டுமே பேசி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என்றும் கலந்து கொள்ள மாட்டார் என்றும் இருவேறு செய்திகள் வெளியாகி பரபரப்புகளைக் கிளப்பின.

தொண்டர்களை உற்சாகப்படுத்த சமீபத்தில் நேர்காணல் ஒன்றையும் அளித்து அதை சமூகவலைதளங்களில் தேமுதிகவினர் பகிர்ந்திருந்தனர். இதையடுத்து நாளையோடு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவதை அடுத்து விஜயகாந்த் இன்று சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று தென் சென்னை தொகுதியில் உள்ள சில பகுதிகளில் அவர் வேனில் இருந்து பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என தேமுதிக வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு விஜயகாண்த் தொண்டர்களை சந்திக்க இருப்பதால் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.