வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (19:26 IST)

கோவையின் வீழ்ச்சிக்குக் காரணம் இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும்தான் – பாஜக வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு !

கோவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையின் வீழ்ச்சிக்கு இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களும்தான் என பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது. வாக்குகளைக் கைப்பற்ற அரசியல் தலைவர்களும் வேட்பாளர்களும் சர்ச்சையானப் பேச்சுகளைப் பேசி வருகின்றனர். கோவைத் தொகுதியின் பாஜக சி பி ராதாகிருஷ்ணன் இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் குறித்து சர்ச்சையானக் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ‘நீட் தேர்வில் என்ன தவறு இருக்கிறது.. அதில் எதை சரி செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் இதுவரை சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக நீட் வேண்டாம் மோடி வேண்டாம் என்றால் வேறு என்னதான் வேண்டும் ?

நீட் தேர்வால்தான் சாமானியனால் கூட மருத்துவர் ஆக முடியும். சேலம் எட்டுவழிச்சாலை மிகவும் முக்கியமான திட்டம். சேலம், சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் உள்ளதால் அந்த திட்டம் அமைந்தால் சேலம் மிகப்பெரிய எழுச்சி அடையும். இதை தடுப்பது தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுப்பதாகும். மக்களுக்கு எந்த நல்லதுமே நடக்கக்கூடாது என்று நினைப்பவர்கள்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி.

இதுபோல தொழில்நகரமாக விளங்கிய கோவை வீழ்ந்ததற்கு காரணம் இஸ்லாமியர்களும் கம்யூனிஸ்ட்களுமேயாகும். இம்முறைக் கோவை மண்ணில் எங்களுக்குக் கிடைக்கும் வெற்றி கம்யூனிஸ சித்தாந்தத்துக்கு வைக்கப்பட போகும் முற்றுப்புள்ளி ஆகும்’ எனக் கூறியுள்ளார்.