வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (10:43 IST)

எனது மகனை மக்களுக்குத் தத்துக்கொடுக்கிறேன் – துரைமுருகன் உருக்கம் !

திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனின் மகன் கதிர்வேல் ஆனந்தை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் உருக்கமாகப் பேசியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக தனது மக்களவைத் தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் திமுக முன்னணி பொறுப்பாளர்களின் வாரிசுகளுக்கு அதிகளவில் இடமளிக்கப்பட்டுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வாரிசு வேட்பாளர்களில் துரைமுருகனின் மகன் கதிர்வேல் ஆனந்தும் ஒருவர்.

இந்நிலையில் நேற்று வேலூர் மக்களவை மற்றும் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திமுக பொருளாளர் துரை முருகன் ‘இதுவரை எத்தனையோ தேர்தலை நான் சந்தித்துள்ளேன். பல வேட்பாளர்களுக்கு நான் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளேன். இப்போது முதல்முறையாக என் மகனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய இங்கு வந்துள்ளேன். நான் எப்படி மக்களுக்கு இதுவரை உண்மையாக இருந்தேனோ, அதேபோல், என் மகனும் தொகுதி மக்களுக்காக உண்மையாக இருப்பார். வாணியம்பாடி தொகுதியில் தொழிற்பேட்டை இல்லை. கதிர் ஆனந்த், வேலூர் எம்பி ஆனதும், தொழிற்பேட்டை அமைக்கப்படும். அவர் செய்யாவிட்டாலும், எனது தலையை அடகு வைத் தாவது வாக்குறுதிகளை நான் நிறைவேற்றித் தருவேன். கதிர் ஆனந்த் இனி உங்கள் பிள்ளை, அவரை நான் தொகுதி மக்களுக்காக தத்து கொடுக்கிறேன். இதை வெறும் வார்த்தைகளால் நான் கூறவில்லை, வேண்டுமானால் கையெழுத்து போட்டு கொடுக்கிறேன்’ என உருக்கமாகப் பேசினார்.