வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. வேட்பாளர்கள் பேட்டிகள்
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (12:43 IST)

உதயசூரியன் சின்னத்திற்கு ஒத்துக்கொண்டது ஏன் ? – திருமாவளவன் உருக்கமான வீடியோ !

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க. ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் மற்றொரு தொகுதியில் திமுக வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் சிதம்பரம் தொகுதியில் நிற்கும் திருமாவளவன் தனிச்சின்னத்திலும் விழுப்புரம் தொகுதியில் நிற்கும் ரவிக்குமார் திமுகவின் சின்னத்திலும் போட்டியிடுவதாக விசிக தலைமை அறிவித்துள்ள்து. இது அந்தக் கட்சியின் தொண்டர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இது சம்மந்தமாக விசிக வின் தலைவர் திருமாவளவன் இன்று வீடியோ மூலம் தொண்டர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் ‘ நான்கு முறை விருப்பச்சின்னப் பட்டியல் கொடுத்தும் தேர்தல் ஆணையம் இன்னும் நமக்கான தனிச்சின்னத்தை ஒதுக்கவில்லை. அதனால் அதன் பின்னணியில் அரசியல் கட்சிகளின் அழுத்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் எப்படியும் சின்னம் கிடைக்க மார்ச் இறுதி ஆகிவிடும் என்ற சூழ்நிலையில் மூன்று வாரத்திற்குள் விழுப்புரம் தொகுதியில் நமது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவே எதார்த்தம்… ஆனால் சிதம்பரம் தொகுதி ஏற்கனவே நான் 4 முறைப் போட்டியிட்டு இருக்கிறேன். அது எனது சொந்த தொகுதி.. அங்கே மக்களிடம் தனிச் சின்னத்தைக் கொண்டு செல்வதில் எளிதானது. அதனால்தான் நான் தனிச்சின்னத்திலும், பொதுச்செயலாளர் ரவிக்குமார்  திமுக சின்னத்திலும் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இது ரவிக்குமார் தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல. எனவே நம் கட்சித் தொண்டர்கள் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் வெறித்தனமாக உழைத்து மதசார்பற்ற இந்தக் கூட்டணியை வெற்றி பெற வைக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் நம் கட்சியின் கட்டுமானததை மறுசீரமைப்பு செய்வதிலும் முழுக் கவனத்தையும் செலுத்தினால்தான் நாம் சிறப்பாக வெற்றி பெற்று நிரந்தர சின்னத்தைப் பெற இயலும்’ என உருக்கமாகப் பேசியுள்ளார்.