1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : வியாழன், 23 ஏப்ரல் 2020 (15:38 IST)

இன்று ’உலகப் புத்தக தினம் ’ - ஒரு சிறப்புக் கட்டுரை !

வான் மழையில்லாமல் போனால் பூமி எப்படி தன் வளத்துக்கு உயிர் கொடுத்து பல்லுயிர் வாழ்விகளைக் காப்பாற்ற முடியாதோ அதேபோல் மனிதனின் உள்மமனதின் ஆற்றலுக்கு இந்த வாசிப்பு என்ற கச்சாப்பொருளைக் கொடுக்காமல் நம்மால் வாழ்வில் உயர்நிலையை எட்டிப்பிடிக்க முடியாது.

மரங்கள்  காற்றையும் சூரிய வெப்பத்தையும், பூமிக்குள் சுருண்டுகிடக்கும்  நீரையும் சுவாசித்து உலகில் ஆக்சிஜன் என்ற பிராணவாயுவை வெளியிடுகிறது. அதேபோல் நாமும் இப்புத்தகங்களின் வழியே கிடைக்கும் சொல்லாடல்கள், கதாப்பாத்திரத்தன்மைகள், உரைநடைகள், அறிவுக் கருத்துகள், வாழ்க்கையைப் போதிக்கும் கதைகளைப் படித்து நம் அனுபவங்களை கொல்கத்தாவில் உள்ள நடமாடும் ஆலமரத்தைப் போல் ஆயிரம் மடங்காக கிளைவிரித்துப் பெரிதாக்கிக் கொள்ளவும் வழிவகுக்கிறது.

நம் சந்தர்பத்தை எதார்த்தக் கண்கொண்டு ஆராயவும், எதிர்காலச் செயல்திட்டத்தைப் பற்றி உள்மனதில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் அறிந்து கொள்ள நிகழ்காலத்தில் நமக்கு உதவும் வாசிப்பு எனும் அகநோக்குத் தொலைநோக்கி தான் இந்தப் புத்தகம்.

கிரேக்கத்தில் இருந்து சென்ற அறிஞர்களால்  பல்வேறு நாடுகளுக்கு அதன்மொழியும் அதிலுள்ள நூல்களும் சென்று சேர்ந்த மாதிரி புத்தகம் என்பது எந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர் எழுதினாலுகூட அது உலகம் என்ற பொதுத்தளத்துக்கு வந்தால் அங்கும், வாசிப்பு எனும் பந்தியில் இலக்கியமாக விருந்துவைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

அந்த வகையில், சீனாவில் காகிதம் தயாரிக்கப்பட்டது முதல், குண்டன்பெர்க் ஜெர்மனியில் முதன்முதலில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தது வரை அதன்பிறது பைபிள் அச்சேரப்பெற்று, இன்று சகல நாட்டு பிரசித்தி பெற்ற இலக்கியங்களும் இணையவெளியில் கேட்பாறின்றி இறைந்துகிடக்கிறது.

அதனை ஆன்லைன் ஷாப்பிங்கும் பெறலாம், அமேசான் கிண்டிலில் பிடிஎஃப் மூலமாகவும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பெறலாம்.

ஏன் ஊருக்கு ஊர் அரசு நூலகங்களும், வாடகை நூல் நிலையங்களில் உள்ள வெள்ளை முகத்தாள்களில் கருப்பு எழுத்துப் பற்களால் புன்னகைப்பதுடன்... மக்களின் வருகைக்காகவே தன் பக்கம் குறித்துவைக்கும் நூல் எனும் உயிர்முடிச்சைப் புத்தகத் தலையை வெளியே நீட்டியவாறு வாயிலையையும் ஜன்னலையும் ஆவலுடன் எட்டிப்பார்த்துக்கொண்டுள்ளது. 

எனவே, வாசிப்பு என்ற அச்சாணி நமது மனத வாழ்வின் மேம்பாட்டுக்கு ஒரு ஆகுதியாக இருந்து நம்மைத் தோற்றுவித்த இந்த உலகினை இயக்குவிக்கும் ஒரு பேராயுதமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

காலத்தை மதிப்பவர்கள் அதைக் கருத்துடன் வாசிப்புக்குச் செலவிடல் நாம் வாழும் வாழ்க்கைக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனே ஆகும்.