வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : வியாழன், 5 ஏப்ரல் 2018 (13:10 IST)

ஐ.பி.எல். போட்டி சென்னையில் கூடாது: 5 கட்சிகள் வலியுறுத்தல்

காவிரி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், சென்னையில் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழகத்தில் உள்ள சில அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.



இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று துவங்குகின்றன. ஏப்ரல் 10ஆம் தேதியன்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி சென்னையில் நடக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமெனக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இந்தப் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகள் சில கோரிக்கை விடுத்துள்ளன.

திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி, எஸ்டிபிஐ ஆகியவை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.இந்த அறிவிப்பு குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் பிபிசி பேசியதிலிருந்து:

கேள்வி- விளையாட்டுப் போட்டிகளில் எதற்கு அரசியலைக் கலக்கிறீர்கள்?



பதில்- விளையாட்டு போட்டிகளில் அரசியல் தலையீடு என்பது புதிது அல்ல. இதற்கு முன்பாகவும் இருந்திருக்கிறது. ஈழ விவகாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது சென்னையில் இலங்கை வீரர்கள் வந்து விளையாடக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை அப்போதைய முதல்வர் அந்தப் போட்டிகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்று அறிவுறுத்தி, அது தடுக்கப்பட்டது.அதேபோல, இலங்கைக்கு தமிழக கபடி வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அப்படி அனுப்பிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆனால், நான் இம்மாதிரி விளையாட்டுகளுக்கு எதிரானவன் அல்ல. காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பைக்காட்டவே இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். காவிரியில் தண்ணீரின்றி, வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் பல விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இப்போது காவிரிக்காகப் போராட்டம் நடக்கும்போது, ஐபிஎல் இங்கு நடக்க வேண்டாமென்கிறோம். அவ்வளவுதான்.

கே. இதன் மூலம் என்ன சாதிக்க நினைக்கிறீர்கள்?

ப. ஐ.பி.எல் என்ன ஒலிம்பிக் போட்டியா? அல்லது இரு நாடுகளுக்கு இடையில் உறவை வளர்க்கக்கூடிய போட்டியா? பெரும் பணக்காரர்களுக்கான ஆட்டம் இது. இந்தப் போட்டிகளால் வேறு என்ன பயன்? இந்தப் போட்டிகளை வேறு இடங்களில் நடத்தினால் என்ன குறைந்துவிடப் போகிறது?கே. உங்கள் வேண்டுகோள் ஏற்கப்படாவிட்டால் என்ன செய்வீர்கள்?




ப. ஐ.பி.எல் நிர்வாகம் நாங்கள் சொல்வதை பொருட்படுத்தி வேறு இடங்களில் போட்டிகளை நடத்த வேண்டும். அப்படியில்லாமல், ஆணவத்தோடு போட்டிகளை இங்கு நடத்தினால், ஆட்களைத் திரட்டி ஜனநாயக வழிகளில் போராடுவோம். எங்கள் இயக்கத் தொண்டர்களும் இந்தப் போட்டிக்கான டிக்கெட்களை வாங்கியுள்ளார்கள். மீறி போட்டிகள் நடந்தால் மைதானத்தில் நுழைந்து, ஜனநாயக வழியில் எதிர்ப்பைத் தெரிவிப்போம். 1996ல் நான் பா.ம.க. இளைஞரணித் தலைவராக இருந்தபோது, இலங்கை அணி இங்கே விளையாடியது. அப்போது எப்படி எதிர்ப்பைக் காண்பித்தோமோ, அதேபோல இப்போதும் செய்வோம்.

கே. போட்டிக்கு ஒரு வாரம்கூட இல்லாத நிலையில், இப்படி போட்டிகளை மாற்றச்சொல்வது சரியா?

ப. டிக்கெட் விற்பனையைத் தவிர, போட்டிக்கான ஏற்பாடுகள் ஏதும் நடந்திருக்காது. வீரர்கள் வரவில்லை. டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு பணத்தைத் திரும்பத் தருவதில் என்ன பெரிய பிரச்சனை இருக்கப்போகிறது?- என்றார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்.

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஆறு வாரங்கள் கடந்திருக்கும் நிலையில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளன.

சமூக வலைதளங்களிலும் ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

11வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் 9 இடங்களில் நடக்கவிருக்கின்றன. 51 நாட்கள் விளையாடப்படும் இந்தப் போட்டிகளில் மொத்தம் 60 போட்டிகள் நடத்தப்படும். இவற்றில் 7 போட்டிகளை சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.