ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (09:40 IST)

பங்குனியில் சிவபெருமானுக்கு உகந்த சூரிய பூஜை! – எந்தெந்த நாட்களில் நடக்கும்?

Lord Shiva
தமிழகம் முழுவதும் சிவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ள நிலையில் பங்குனி மாதத்தில் சிவ லிங்கத்திற்கு நடைபெறும் சூரிய பூஜை தனி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.



கேட்டதை அருளும் பரமேஸ்வரர் பல திருத்தலங்களில் லிங்க ரூபமாக அருள் பாலிக்கிறார். ஆண்டுதோறும் சிவபெருமானுக்கு பல சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் மகாசிவராத்திரிக்கு பிறகு வரும் சூரியபூஜை சிறப்பு வாய்ந்தது.

கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய கதிர்கள் நேரடியாக பட்டு பூஜிக்கும் நாள் சூரிய பூஜை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சூரிய பகவான் சிவபெருமானை தனது கதிர் கரங்களால் பூஜித்து வழிபடுகிறார் என்பது ஐதீகம்.

இந்த சூரிய பூஜை பங்குனி மாதத்தில் அரிதாக சில சிவ ஸ்தலங்களில் மட்டுமே நடைபெறுகிறது. திருவையாறு அருகே உள்ள திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி 13, 14, மற்றும் 15 ஆகிய தேதிகளில் சூரியக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது நேரடியாக விழும்.


தஞ்சை அருகே உள்ள திருப்பரிதி நியமத்தில் அருள்பாலிக்கும் பரிதியப்பர் சுயம்பு மூர்த்திக்கு பங்குனி மாதம் 17, 18, மற்றும் 19 ஆகிய நாட்களில் சூரிய பூஜை நடத்தப்படுகிறது.

திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி 15 முதல் 18 வரை சூரிய பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் சேலம் தாரமங்களத்தில் உள்ள கயிலாச நாதர் திருக்கோவில், கும்பகோணம் சாலையில் உள்ள திங்களூர் கயிலாசநாதர் சமேத பெரியநாயகி திருக்கோவில், திருச்சி தாயுமான சுவாமி திருக்கோவில், சேறை செந்நெறியப்பர், கண்டியூர் வீரட்டேஸ்வரர், திருவாடுதுறை மாசிலாமணி ஈஸ்வரர் ஆகியோரையும் சூரிய பகவான் தனது திருக்கரங்களால் வழிபடுகிறார்.

Edit by Prasanth.K