வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 29 செப்டம்பர் 2022 (13:32 IST)

பல்வேறு மாநிலங்களில் விஜயதசமி திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது...?

Dussehra 1
இந்தியாவின் பல பகுதிகளிலும் தசரா அல்லது விஜயதசமித் திருவிழாவாக தீயதை அழித்து நல்லதை வரவேற்பதைக் குறிக்கும் விழாபாடாக இந்து மக்களால் பெருவாரியாகக் கொண்டாடப்படுகின்றது.


தசரா என்ற சொல்லும் இதே பொருளைக் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் நவராத்திரி விழாவாகவும், வங்காளம் மற்றும் வட இந்தியாவில் துர்கா உத்சவமாகவும் கொண்டாடப்படுகின்றது. தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமியானது அனுசரிக்கப்படுகின்றது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது. தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் இப்புனிதத் திருநாளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

வங்காளத்தில் துர்கையானவள் அரக்கன் மகிசாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனைக் கொன்ற பத்தாம் நாள் வெற்றியை மக்கள் விஜயதசமித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். உலக தர்மத்தைக் காக்க அரக்கனுடன் போரிட்டு வெற்றியை உலகிற்கு அர்ப்பணித்த துர்க்கையின் திருவுருவமானது ஊரின் பல பகுதிகளிலும் மண்டல்கள் அமைத்து காலை, மாலை பூஜை மற்றும் பஜன், தாண்டியா என்று ஊரே விழாக்கோலம் பூண்டு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

ஒன்பது இரவுகளும் அன்னை துர்க்கையானவள் சைலபுத்திரி, ப்ரம்மச்சாரினி, சந்த்ரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, கால்ராத்ரி, மஹாகெளரி மற்றும் சித்திதாத்ரி ஆகிய ஒன்பது அவதாரங்களில் காட்சியளிக்கிறாள்.

புலி, சிங்கம், கழுதை மற்றும் காளை போன்ற விலங்குகளை வாகனமாகக் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றாள். நவராத்திரி, தசரா, துர்கா பூஜை மற்றும் துர்கா அஷ்டமி என்ற பெயர்களில் இவ்விழா மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும், பத்தாம் நாள் துர்க்கையின் திருவுருவமானது தண்ணீரில் கரைக்கப்படுகின்றது.

வட இந்தியாவில், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர், ராவணனைக் கொன்ற நாளின் வெற்றியை மக்கள் ராம்லீலா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தசராவின் பத்தாவது நாள் கொண்டாட்டமாக ராம்லீலா அனுஷ்டிக்கப் படுகின்றது. அன்றைய தினம், ராவணன், கும்பகர்ணன் மற்றும் ராவணனின் மகன் மேகநாதன் ஆகிய மூன்று கொடும்பாவிகளை எரிக்கும் நிகழ்ச்சியுடன் தசரா நிறைவடைகின்றது.

தமிழ்நாட்டில் நவராத்திரித் திருவிழாவது தனித்துவமாகக் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் பொம்மைக் கொலுக்கள் வைத்தும், இன்னும் பல வீடுகளில் சரஸ்வதி பூஜை, விஜயதசமித் திருநாளாகவும் கொண்டாடப்படுகின்றது.