4 டன் மலர்களால் ராஜ அலங்காரம்.. கோவையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி..
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு, உற்சாகத்துடன் விநாயகரை வழிபட்டனர்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலைகளை கொண்டுள்ள, கோவை புளியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
4 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, முகத்தில் மட்டும் 40 கிலோ சந்தனம் பூசப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது.
கொழுக்கட்டை, லட்டு, அதிரசம், வடை, எள் உருண்டை, முறுக்கு என 36 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
இதேபோல், ஈச்சனாரி விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் 108 விநாயகர் கோவில் உட்பட கோவையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
Edited by Mahendran