Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலட்சுமி பூஜையை யாரெல்லாம் செய்யலாம் தெரியுமா...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (16:10 IST)
தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்களும், கன்னிப்பெண்களும் இந்த விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும். கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.


இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு விதமான பழக்க வழக்கங்கள் உண்டு. குலதெய்வ வழிபாட்டை சீரும் சிறப்புமாகச் சிலர் செய்வார்கள் சிலர். இன்னும் சிலர், தங்களின் குடும்பத்தில் இறந்த கன்னிப்பெண்கள் முதலானவர்களை, கடவுளாகவே பாவித்து, படையல் போடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.

இப்படி, குலதெய்வ வழிபாட்டையும் பித்ருக்கள் வழிபாட்டையும் குறைவறச் செய்தாலே போதுமானது. அந்த வீட்டில், எந்த துர்தேவதைகளும் நுழையமுடியாது. அமைதியும் ஆனந்தமுமாக அந்த வீடு திகழும். அதேபோல், இதுவரை வரலட்சுமி பூஜையைச் செய்யாத குடும்பமாக இருந்தாலும், அந்த பூஜையை முறையே அறிந்து கொண்டு, வயது முதிர்ந்த பெண்களின் ஆலோசனைகளின் படியும் ஆச்சார்யர்களின் வழிகாட்டுதல்படியும் வரலட்சுமி பூஜையை தாராளமாகச் செய்யலாம்.

விரத சூடாமணி எனும் நூல், லட்சுமி வழிபாடு நம் வாழ்விலும் குடும்பத்திலும் மிக மிக முக்கியம் என விவரிக்கிறது. அதேபோல், வரலட்சுமி பூஜை என்பதும் மாங்கல்ய பலம் தந்து, தீர்க்கசுமங்கலியாக பெண்களை வாழச் செய்யும் பூஜை.

இந்த வரலட்சுமி பூஜையை, முழு ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் எவர் செய்தாலும் அவர்கள் இல்லம் தேடி மகாலட்சுமி வருவாள்; அவர்களின் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சத்தை நிரந்தரமாக இருக்கும்படி அருளுவாள் என அறிவுறுத்துகிறது.

அடுத்த கட்டுரையில்
Show comments