வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

பச்சை பாசிப்பயறு மாவை பயன்படுத்தி சருமத்தை பொலிவாக்குவது எப்படி...?

முன்பெல்லாம் பெண்கள் மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை கொண்டே அழகை மேம்படுத்தி வந்தனர். ஏனெனில் இவை எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து  பயன்படுத்தலாம்.
 
சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் மஞ்சள் தூளை  சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊறவைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின்  வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.
 
அன்றாடம் பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். மேலும் பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
 
பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1  ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2 ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
 
சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது  பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.