வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (16:07 IST)

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரிஷப் பண்ட்… உறுதி செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி படுகாயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார் ரிஷப் பண்ட்.

இம்மாத தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது.

படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில், முதுகுப் பகுதியில், கால் முட்டியில் தசை நார் கிழிவு என சில இடங்களில் அடிபட்டுள்ளது. டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் காயம் ஆறுவதற்கு இன்னும் சில மாதங்கள் வரை ஆகும் என்பதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், உலகக்கோப்பை ஆகிய முக்கியத் தொடர்களில் அவர் விளையாட முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.