வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (16:45 IST)

இந்தியா சாதனை வெற்றி: இங்கிலாந்து அணி படுதோல்வி

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.


 

இந்நிலையில், 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அபாரமாக ஆடிய மொய்ன் அலி 146 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஜோடிகளான கே.எல்.ராகுல்-பார்த்திவ் படேல் இணை 152 ரன்கள் குவித்தது. பார்த்திவ் படேல் 71 ரன்கள் குவித்தார். பின்னர் புஜாரா (16), விராட் கோலி (15) என அடுத்தடுத்து வெளியேறினர்.

இதற்கிடையில் அற்புதமாக ஆடிய கே.எல்.ராகுல் சதத்தினை பதிவு செய்தார். பின்னர் கே.எல்.ராகுல் உடன் கருண் நாயர் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் தாக்குதலை நேர்த்தியாக எதிர்கொண்டது. சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் துரதிர்ஷ்டவசமாக 199 ரன்களில் வெளியேறினார்.

இன்றைய நான்காம் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக 71 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை தொடங்கிய கருண் நாயர் தொடர்ந்து சதம், இரட்டை சதம் என முன்னேற இறுதியாக முச்சதமும் அடித்து அசத்தினார்.

அறிமுக டெஸ்ட் தொடரிலேயே முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும், முச்சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கருண் நாயர் பெற்றார். மேலும் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஒருவரின் இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 759 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. இதனால், இந்திய அணி 282 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனையடுத்து தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 207 ரன்களுக்குள் எடுப்பதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக ஜென்னிங்ஸ் 54 ரன்களும், அலஸ்டைர் குக் 49 ரன்களும் எடுத்தனர்.

மதிய இடைவேளைக்குப் பிறகு வரைக்கும் இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. 190 ரன்கள் வரையிலும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. எப்படியேனும் ஆட்டத்தை டிராவில் முடிந்தால் போதும் என்ற நோக்கிலேயே ஆடியது. ஆட்டமும் அப்படியே சென்றது.

ஆனால், மொய்ன் அலி விக்கெட்டை இழந்ததும் அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இங்கிலாந்து அணியினர் இழந்தனர். இங்கிலாந்து அணியில் 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வென்றது. ஆட்டநாயகன் விருது கருண் நாயருக்கும், தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.