1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:06 IST)

ஜெயிச்சுட்டா.. அதுக்காக இப்படியா? – ஆவேஷ் கான் மேல் ஆவேசமான ஐபிஎல் நிர்வாகம்!

Avesh khan
நேற்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் வெற்றிக்களிப்பில் செய்த செயலுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விராட் கோலி (61), பாப் டு ப்ளஸி (79), மேக்ஸ்வெல் (59) என ரன்களை குவித்தனர்.

ஆனால் அடுத்து லக்னோ அணி களமிறங்கியபோது மோசமான பவுலிங்கால் ரன்களை அதிகம் விட்டது ஆர்சிபி. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் எகிற 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இறுதியில் வெற்றி வாய்ப்புக்கு அருகே இருக்கையில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆவேஷ் கான் ஒரு பந்து மட்டுமே சந்தித்த நிலையில் அதிலும் ரன் எதுவும் எடுக்கவில்லை. எனினும் போட்டியில் வெற்றி பெற்றதும் உற்சாகமான ஆவேஷ் கான் தனது ஹெல்மெட்டை மைதானத்திலேயே தூக்கி வீசினார். இவர் அவ்வாறு செய்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆவேஷ் கான் கிரிக்கெட் உபகரணங்களை சேதப்படுத்துவது குற்றம் என நடத்தை விதிகள் பிரிவு 2.2ன் கீழ் அவரை கண்டித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

Edit by Prasanth.K