1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (13:50 IST)

வந்தே மாதரம் பாடலை பாடிய இந்திய வீரர்கள்.! மைதானத்தில் உணர்ச்சி பொங்கிய ரசிகர்கள்..!!

Indian Team
மும்பை வான்கடே  மைதானத்தில் ஒலித்த வந்தே மாதரம் பாடலை இந்திய வீரர்களும், ரசிகர்களும் உணர்ச்சி பொங்க பாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய-தென்னாபிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தனி விமானம் மூலம் நாடு திரும்பியது.

பின்னர் பிரதமர் மோடியை, இந்திய வீரர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கொண்டாட்டங்களுக்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
 
Cricket Team
இதையொட்டி திறந்தவெளி வாகனத்தில் இந்திய வீரர்கள் கோப்பையுடன் வான்கடே மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது மும்பை மரைன் டிரைவ் சாலையில் அலைகடலென திரண்ட ரசிகர்கள், இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.  எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது. கையில் பதாகைகள் ஏந்தி, கிரிக்கெட் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.   

கட்டுக்கடங்காத கூட்டத்தால் இந்திய வீரர்கள் சென்ற வாகனம் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்று மும்பை  வான்கடே   மைதானத்தை அடைந்தது. அப்போது உலகக்கோப்பையை கையில் ஏந்தியவாறு இந்திய வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.


இந்த நிகழ்ச்சியின் போது  ஏ.ஆர்.ரஹ்மானின் தேசபக்திப் பாடலான 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்பட்டது. இந்த பாடலை இந்திய வீரர்களும், ரசிகர்களும் இணைந்து பாடியது மைதானத்தில் உணர்ச்சி பொங்கியது. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.