1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜூலை 2024 (13:09 IST)

இந்தியாவிற்கு பெருமை சேருங்கள்.! ஒலிம்பிக் செல்லும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!

Modi
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த முறையும் நீங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து உள்ளிட்ட சில வீரர்கள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாகவும் பங்கேற்றனர்.
 
வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர்,   நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் உள்ளீர்கள் என்றும் வெற்றி பெற்று திரும்பும் போது உங்களை வரவேற்கும் மனநிலையில் நானும் இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். ஒலிம்பிக் கற்றலுக்கான மிகப்பெரிய களம் என தெரிவித்த பிரதமர், கற்கும் மனப்பான்மையுடன் பணியாற்றுபவர்களுக்கு கற்க வாய்ப்புகள் அதிகம் என்றும் குறை சொல்லி வாழ நினைப்பவர்களுக்கு வாய்ப்புகளே கிடைக்காது என்றும் குறிப்பிட்டார். 

 
நம்மை போன்ற பல நாடுகளை சேர்ந்தவர்களும் ஒலிம்பிக் வருகிறார்கள் என்றும் பல சிரமங்களையும், அசவுகரியங்களையும் எதிர்கொள்கிறீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.  ஆனால் உங்களின் இதயத்தில் நாடும், நமது தேசியக் கொடியும் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த முறையும் நீங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்று வீரர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.