செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 31 அக்டோபர் 2025 (06:33 IST)

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி போட்டி நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கி 50 ஓவர்களில் 338 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் தொடக்க வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் அதிரடியாக ஆடி 93 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக எல்லிஸ் பெர்ரி 77 ரன்கள் சேர்த்தார். பின்வரிசையில் வந்த ஆஷ்லே கார்ட்னர் 45 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து 339 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பத்தில் சில விக்கெட்கள் விழுந்து தடுமாறினாலும் மூன்றாவதாக வந்த ஜெமிமா ரோட்ரிக்யூஸ் மிகச்சிறப்பாக விளையாடி சதமடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் அவர் 127 ரன்கள் சேர்த்தார். அவருக்குத் துணையாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 89 ரன்கள் சேர்த்தார். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 49 ஆவது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை தொடரில் இருந்து வெளியேற்றியது.  இதையடுத்து இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியுடன் இந்திய அணி மோதவுள்ளது. சதமடித்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்த ஜெமிமா ரோட்ரிக்யூஸ் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.