வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (18:16 IST)

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
 
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மசகட்ஸா 8 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து இணைந்த சிபாபா - சிபண்டா இணை 2 ஆவது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்தது.
 
பின்னர், சிபாபா 27 ரன்களும், சிபண்டா 38 ரன்களிலும், மருமா 17 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த வீரர்கள் சீட்டுக்கட்டை சரிந்தனர். 104 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்றிருந்த ஜிம்பாப்வே மேற்கொண்டு 19 ரன்கள் எடுப்பதற்குள் மிஞ்சிய 6 விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இந்திய அணி தரப்பில் ஜாஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும், தவன் குல்கர்னி மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 21. 5 ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமலே வெற்றி வாகை சூடியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் 63 ரன்களும், முதல் சர்வதேசப் போட்டியில் களமிறங்கும் ஃபைஸ் ஃபாஸல் 55 ரன்களும் எடுத்தனர்.
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி கண்டு இளம் இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.