1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : புதன், 30 மார்ச் 2022 (13:31 IST)

நாளை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் ஸெலென்ஸ்கி

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை (வியாழக்கிழமை) ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக, ஆஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ஸ்டூவர்ட் ராபர்ட் தெரிவித்துள்ளார்.


"போருக்கான எந்தவித காரணமும் இல்லாமல் யுக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கிய ரஷ்யாவுக்கு எதிராக அசாத்திய தைரியத்தையும் உறுதியையும் யுக்ரேன் வெளிப்படுத்துகிறது," என அவர் தெரிவித்துள்ளார்.

யுக்ரேனுக்கு 65 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதநேய உதவிகளை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. மேலும், 91 மில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ள ஆஸ்திரேலியா, "யுக்ரேனுக்கான ராணுவ உதவி, உடனடி தேவையாகவும் தொடர்ந்து நீடிக்கக்கூடியதாகவும் உள்ளது," என தெரிவித்துள்ளது.

ஐ.நா., மற்றும் அமெரிக்க நாடாளுமன்றம் முதல் ஜப்பான் நாடாளுமன்றம் வரையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் தலைவர்களின் கூட்டங்களில் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் அவருடைய பேச்சுக்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிக்கின்றனர். அவருடைய பேச்சு, மேற்கு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் யுக்ரேனுக்கான ஆதரவை திரட்டும் "தகவல் போர்" என விவரிக்கப்படுகிறது.

"யுக்ரேனின் ஆத்மாவை பிரதிபலிப்பது எப்படி என அவருக்கு தெரிந்திருக்கிறது. அவருடைய பேச்சு மட்டுமல்ல, அவர் எப்படி தோன்றுகிறார், அவருடைய பின்னணி தோற்றம், எங்கு பேசுகிறார் என்பதிலும் அவை பிரதிபலிக்கிறது," என, நிபுணர் ஒருவர் பிபிசியிடம் சமீபத்தில் தெரிவித்தார்.