1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (16:17 IST)

பீமா கொரேகான் வழக்கை கைவிட உத்தவ் தாக்கரே உறுதி!

தலித் செயற்பாட்டாளர்கள் மீதான பீமா கொரேகான் வழக்கை கைவிட உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார்.
பீமா கொரேகான் சம்பவம் தொடர்பாக தலித் செயற்பாட்டாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கைக் கைவிடுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர்களிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதி அளித்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது. 
 
தம்மை சந்தித்த அமைச்சர்கள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் உள்ளிட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் குழுவிடம் பேசும்போது இத்தகவலை முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2018 ஜனவரி 2-3 தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் பீமா-கொரேகான் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய பாஜக ஆட்சியில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
 
நவம்பர் 28-ம் தேதி முதல்வராகப் பதவியேற்ற உடன் ஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிராகப் போராடியவர்கள், கொங்கன் பகுதியில் நானார் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறும்படி மாநிலத்தின் உள்துறையை அவர் கேட்டுக்கொண்டார் என்றும் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.