வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 நவம்பர் 2020 (15:23 IST)

தாய்லாந்தில் கிடைத்த 5,000 ஆண்டு திமிங்கல கூடு - இப்படியும் ஓர் உயிரினம் இருந்ததா?

கிட்டத்தட்ட கச்சிதமாக கெடாமல் பாதுகாத்த, 3,000 - 5,000 ஆண்டு பழமையான திமிங்கலத்தின் எலும்புக் கூடு, தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நவம்பர் தொடக்கத்தில் இந்த எலும்புக் கூட்டை, மேற்கு பாங்காக் கடற்கரையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். 12 மீட்டர் நீளம் கொண்ட எலும்புக் கூடு, ப்ரைட்ஸ் திமிங்கல (Bryde's Whale) வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
 
கடல் மட்டம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, கடந்த காலத்தைக் காண இந்த கண்டுபிடிப்பு உதவும் என நம்புகிறார்கள் நிபுணர்கள். புதைபடிவ வடிவில் கிடைத்த பகுதியளவு திமிங்கல எலும்புக்கூடு, உண்மையிலேயே ஓர் அரிய கண்டுபிடிப்பு என்கிறார் பாலூட்டி இனங்கள்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்கஸ் சுவா.
 
ஆசியாவில் சில திமிங்கல புதைபடிவங்கள் உள்ளன, அற்றில் சில நல்ல நிலையில் உள்ளன என்கிறார் அவர். தாய்லாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் வராவூத் சில்பா அர்ச்சா பகிர்ந்துள்ள படங்களில் எலும்புகள் கிட்டத்தட்ட அப்படியே இருப்பதைக் காட்டுகின்றன.
 
இதுவரை 80 சதவீதத்துக்கு மேற்பட்ட எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது, இதில் முதுகெலும்புகள், விலா எலும்புகள், நீந்தப் பயன்படுத்தும் துடுப்புகள் மற்றும் ஒரு தோள்பட்டைப் பகுதி ஆகியவை அடங்கும் என்கிறார் அமைச்சர் அர்ச்சா. இந்த திமிங்கல எலும்புக்கூட்டின் தலை மட்டும் சுமார் 3 மீட்டர் நீளம் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
இன்றைய பிரைடின் திமிங்கலங்களுடன், அன்றைய காலத்து திமிங்கலத்தை ஒப்பிடும் போது, ஏதேனும் வேறுபாடுகள் இருக்கிறதா என கண்டு பிடிக்க இந்த பழைய திமிங்கல எலும்புக் கூடு உதவும். அதோடு, கடந்த காலங்களில் இந்த திமிங்கிலங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, ஆராய்ச்சியாளர்களை இந்த கண்டுபிடிப்பு அனுமதிக்கும் என்று சுவா கூறுகிறார்.
 
இந்த எலும்புக்கூடு "கடல் மட்ட மதிப்பீடு, படிந்து இருந்த மண் வகைகள் மற்றும் அந்த நேரத்தில் சமகால உயிரியல் சமூகங்கள் எப்படி இருந்தன என்பது உட்பட, அந்த நேரத்தில் பேலியோ பயோலாஜிக்கல் மற்றும் புவியியல் நிலைமைகள்" பற்றிய தகவல்களையும் வழங்கும்.
 
இந்த எலும்புக்கூடு எவ்வளவு பழமையானது எனக் கண்டுபிடித்த பின், கடந்த காலத்தைக் காண ஒரு வாய்ப்பைத் தருகிறது என்கிறார் சுவா. இந்த எலும்புக் கூட்டின் வயதை அறிய, இன்னும் அதன் புதைபடிவ ஆய்வு செய்யப்படவில்லை, டிசம்பர் மாதத்தில் சோதனைகள் செய்யப்பட்டு முடிவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த 10,000 ஆண்டுகளில் தாய்லாந்து வளைகுடா ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்கிறார்கள் உயிரியலாளர்கள். 10,000 ஆண்டுகளுக்கு முன், தாய்லாந்தின் கடல் மட்டம் இன்று இருப்பதை விட 4 மீட்டர் அதிக உயரத்தில் இருந்து இருக்கலாம். என்கிறார்கள். அத்துடன், கண்டத் திட்டுகளின் நகர்வுகள் அதிகம் இருந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
 
சமுத் சாகோனின் கடற்கரையில் இந்த எலும்புக் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளிலும், சூடான மற்றும் வெப்பமண்டல நீரில் வாழும் பிரைடின் இன திமிங்கலங்கள், இன்றும் தாய்லாந்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.