1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By VM
Last Updated : சனி, 9 பிப்ரவரி 2019 (07:10 IST)

தாய்லாந்து இளவரசியின் அரசியல் ஆசை - அரச குடும்பத்தில் மோதல்

இதற்கு முன்னர் நடந்திராத நடவடிக்கையான, அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் முடிவை தாய்லாந்து அரசரின் மூத்த சகோதரி உபான்ராட் மகிதூன் நியாயப்படுத்தி பேசியுள்ளார்.


 
இதனிடையே தனது சகோதரி அரசியலில் ஈடுபடும் முடிவு தாய்லாந்து மன்னர் வஜ்ராலங்கோன் 'முறையற்றது' என்று கூறியுள்ளார்.
 
67 வயதாகும் உபான்ராட் மகிதூன் அரசியலில் ஈடுபட்டால், பாரம்பரியமாக அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்கும் மன்னர் குடும்பத்தின் வழக்கம் இத்துடன் முறிவைச் சந்திக்கும்.
 
"அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபடுவது, நாட்டின் பாரம்பரியம், வழக்கம் மற்றும் கலாசாரத்துக்கு முரணானது. எனவே இது மிகவும் முறையற்றதாக கருதப்படும்," என்று மன்னர் வஜ்ராலங்கோன் செய்தி வெளியிட்டுள்ளார்.
 
இந்த வேட்பாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்வது தாய்லாந்து குடிமகளாக அவருக்கு இருக்கும் உரிமை என்று உபான்ராட் மகிதூன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க குடிமகன் ஒருவரைத் திருமணம் செய்தபோது, அவருடைய அரச பட்டங்களை அவர் துறந்தார். ஆனால், ராஜ மரியாதையை உறுதி செய்யும் கடுமையான சட்டங்களால் பாதுகாக்கப்படும் தாய்லாந்து அரச குடும்பத்தின் மதிப்பு பெறுகின்ற உறுப்பினராகவே அவர் வலம் வந்தார்.


 
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்ட முன்னாள் அரசோடு தொடர்புடைய கட்சியில் போட்டியிட போவதாக அறிவித்து உபான்ராட் மகிதூன் ஆச்சரியம் அளித்தார்.
 
முன்னாள் பிரதமர் தக்சின் சின்னவாட்டின் கட்சியின் சார்பில் களமிறங்க இருப்பதாக அவர் அறிவித்திருந்தார்.
 
ஒரு ஊழல் வழக்கில் இருந்து தப்புவதற்காக தக்சின் சின்னவாட் 2008ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தை விட்டு வெளியேறி துபாயில் வசித்து வருகிறார்.
 
பிரதமர் பதவியில் இருந்த தக்சின் சின்னவாட்டின் சகோதரி இங்லக் சின்னவாட் கடந்த 2014-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி நடப்பதற்கு சில வாரங்கள் முன்பு அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
 
இங்லக் சின்னவாட்டுக்கு கிராமப்புற விவசாயிகளுக்கு அரசி கொள்முதல் விலையில் மானியம் அளித்தது தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை 2017இல் வழங்கப்பட்டது. ஆனால், தண்டனை அளிப்பதற்கு முன்னதாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.