வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஏப்ரல் 2019 (19:25 IST)

அமெரிக்காவில் செல்லப் பறவை தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான செல்லப் பறவை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
பறவை முதியவரை தாக்கியது தொடர்பாக தங்களுக்கு வெள்ளிக்கிழமையன்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த முதியவர் காயமடைந்து இருந்ததாகவும் உள்ளூர் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
 
பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்வின் ஹஜோஸ் என்னும் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கசோவரி என்றழைக்கப்படும் இது தீக்கோழி இனத்தை சேர்ந்த பறக்க இயலாத பறவையாகும்.
 
ஃபுளோரிடாவின் வடக்கு பகுதியிலுள்ள அலசுவா என்னும் நகரத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ள காவல்துறையினர் இதை 'துயரகரமான விபத்து' என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
"எங்களுக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, பறவையின் அருகே நின்றுக்கொண்டிருந்த முதியவர் கால் தடுமாறி கீழே விழுந்தவுடன் பறவை அவரை தாக்கியது" என்று அந்நகர காவல்துறையின் துணை ஆணையர் ஜெஃப் டெய்லர் தெரிவித்துள்ளதாக 'கைன்ஸ்வில்லே சன்' செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஹஜோஸின் தோழியாக தன்னை கூறிக்கொள்ளும் பெண்ணொருவர், அவர் "தான் விரும்பியதை செய்து கொண்டிருந்தார்" என்று உள்ளூர் செய்தித்தாளிடம் கூறினார்.
 
தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட ஒட்டக வகையைச் சேர்ந்த லாமா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு விலங்களை இவர் பல ஆண்டுகளாக வளர்த்து வருவதாக உள்ளூர் செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.
 
ஈமுக்களை ஒத்த உடலமைப்பை கொண்ட இந்த கசோவரி, உலகின் மிகப் பெரிய மற்றும் அதிக எடையுடைய பறவை இனங்களில் ஒன்று. இதன் எடை சராசரியாக 45 கிலோ.
 
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு காலிலும் சுமார் 13 செ.மீ நகமுடைய கசோவரிகளால் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.
 
புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் விதிமுறையின்படி, கசோவரியை வளர்ப்பதற்கு தக்க அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.
 
முதியவரின் இறப்புக்கு காரணமாக அந்த பறவை இன்னமும் அதே வீட்டிலேயே இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.