வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 6 நவம்பர் 2019 (19:53 IST)

பூமியின் சில பகுதிகள் வாழத் தகுதியற்றதாக மாறும் - எச்சரிக்கும் அறிவியலாளர்கள்

இந்த புவி ஒரு காலநிலை மாற்ற அவசரநிலையை எதிர்கொண்டுள்ளது எனக் கூறும் ஒரு ஆய்வினை உலகம் முழுவதுமுள்ள 11 ஆயிரம் அறிவியலாளர்கள் ஆதரித்துள்ளனர்.

40 ஆண்டுகால தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள அரசுகள் இந்த பிரச்சனையை சரி செய்யத் தவறிவிட்டன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

மிக மோசம்

நாம் இதுவரை நம்பியதைவிட உண்மை நிலவரம் மிக மோசமாக உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த அக்டோபர்தான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் வெப்பமான அக்டோபர் மாதம் என ஓர் ஆய்வு சொல்லியது.

ஆனால், பயோசைன்ஸ் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வு முடிவுகள், முந்தைய ஆய்வுடன் முரண்படுகிறது.

அதாவது, பூமியின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்தை மட்டும் கணக்கில் கொண்டு, அது கணக்கிடப்பட்டுள்ளதாகவும், இது வெப்பத்தைக் கணக்கிட போதுமான முறை அல்லவென இந்த புதிய ஆய்வு கூறுகிறது.

கடந்த 40 ஆண்டுகள் காலநிலை எப்படி மாறி உள்ளதென ஆய்வு செய்துள்ள அறிவியலாளர்கள், மனிதன் மற்றும் மிருகங்களின் பெருக்கம், புதை படிவ எரிபொருள் நுகர்வு ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துள்ளார்கள்.

நம்பிக்கை இழக்கத் தேவையில்லை

அதேநேரம் முழுவதுமாக நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. சில நல்ல முன்னேற்றங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியானது 373 சதவீதம் அதிகரித்துள்ளது என நம்பிக்கை ஊட்டுகிறது. ஆனால், அதேநேரம் புதை படிவ ஆற்றலைவிட 28 மடங்கு இது குறைவு என்றும் சுட்டிக்காட்டுகிறது.

நிலைமை மிகமோசமாக ஆகிக் கொண்டிருக்கிறது. காலநிலை மாற்ற அவசரநிலையை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் தாமஸ் நியூசம், "நாம் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றால், நம் நுகர்வுக்காகக் கால்நடை வளர்ப்பதைக் குறைத்துக் கொள்ளவில்லை என்றால், எரிபொருள் தேவைக்காக நிலங்களை அழிப்பதை நிறுத்தவில்லை என்றால், இப்போது நாம் எதிர்கொண்டிருப்பதைவிட நிலைமை மோசமாகும்" என்று அவர் கூறி உள்ளார்.

அதாவது, இந்த பூமியின் சில பகுதிகள் மக்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிடும் என்கிறார் தாமஸ்.

பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் ஆய்வுகள் மற்றும் பிற அறிவியலாளர்களின் பல முடிவுகள் விடுத்த எச்சரிக்கையை இந்த புதிய ஆய்வானது ஏற்றுக் கொண்டாலும், பரந்துபட்ட தளத்தில் புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சுகிறது.
 
குறிப்பாக ஆறு தளங்களில் உடனடியாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆற்றல்புதை படிவ ஆற்றல் நுகர்வைத் தடுக்க வேண்டும். புதை படிவ ஆற்றல் நுகர்வுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதற்கான மானியங்களை ரத்து செய்ய வேண்டும்.
இயற்கைகாடுகளை மீட்டுருவாக்க வேண்டும், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் சதுப்புநில காடுகளை அழிவிலிருந்து காக்க வேண்டும்.
உணவுகாய்கறிகளை உண்ண வேண்டும். காடுகளை அழித்து பண்ணைகள் உருவாக்கி, அவற்றில் மாமிச உணவுத் தேவைக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. அதனால், மாமிச நுகர்வைக் குறைக்க வேண்டும்.
குறைந்த நேர மாசுமீத்தேன், ஹைட்ரோஃப்ளோரோ கார்பன் நுகர்வைக் குறைக்க வேண்டும்.
பொருளாதாரம்: புதை படிவ ஆற்றலை சார்ந்திருக்காதவாறு பொருளாதாரத்தை மாற்ற வேண்டும்.
மக்கள்தொகைமக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இதனை ஆதரிக்கும் அறிவியலாளர்கள் யார்?

153 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் அறிவியலாளர்கள் இதனை ஆதரிக்கிறார்கள்.
இதனை ஆதரித்துக் கையெழுத்திட்ட அறிவியலாளர்கள் பெயர்கள் வெளிப்படையானது; இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.