1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (00:07 IST)

இதுவரை 13 லட்சம் யுக்ரேனியர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர்

ஐ.நா அகதிகள் அமைப்பின் கருத்துப்படி, யுக்ரேனில் போரினால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை விரைவில் 15 லட்சத்தைத் தாண்டக்கூடும்.
 
“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நாம் கண்ட மிக வேகமாக இடம்பெயரும் அகதிகள் நெருக்கடி இது,” என்று ஐ.நா அகதிகள் அமைப்பின் தலைவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
 
படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சுமார் 13 லட்சம் மக்கள் ஏற்கெனவே தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
 
போலந்து நாட்டின் அதிபருடைய கூற்றுப்படி, இதுவரை வந்த அகதிகளில் பாதிக்கும் மேலானவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
 
ஆனால், அனைத்து அகதிகளும் தாங்கள் முதலில் தப்பி வரும் நாடுகளில் தங்குவதைத் தேர்ந்தெடுப்பதில்லை.
 
உதாரணமாக, ருமேனியாவை எடுத்துக் கொள்ளலாம். போரின் முதல் எட்டு நாட்களில் அங்கு பயணித்த 200,000 பேரில் 140,000 பேர் பிற நாடுகளுக்குப் புறப்பட்டார்கள்ம் சுமார் 60,000 பேர் மட்டுமே ருமேனியாவில் இருந்ததாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
யுக்ரேன் எல்லையிலுள்ள நாடுகள், போரிலிருந்து வெளியேறும் பலருக்கும் முதல் புகலிடமாகச் செயல்படுகின்றன. ஏனெனில், அவர்கள் அங்கிருந்து மற்ற தொலைவிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கிறார்கள்.