1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (14:59 IST)

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா வைரஸுக்கு அஞ்சாமல் குவியும் பக்தர்கள் !

இந்தியா முழுக்க கொரோனா மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கும்பமேளா திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராட ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருக்கின்றனர்.
 
வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட, இன்று (ஏப்ரல் 12 திங்கட்கிழமை) மக்கள் லட்சக் கணக்கில் குவிந்துள்ளனர். மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கின்றனர். 
 
கங்கையில் நீராடுவதால் தங்களின் பாவங்கள் விலகி, மோட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தியாவில், கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 
இன்று (ஏப்ரல் 12) காலை 8 மணிக்கு இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,68,912 பேருக்கு கோவிட்-19 தொற்று உண்டாகியுள்ளது. இந்நிலையில் ஹரித்வார் நகரத்தில் கும்பமேளா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
 
மருத்துவ நிபுணர்கள் கும்பமேளா கொண்டாட்டத்தை ரத்து செய்யுமாறு கூறினார். ஆனால் அரசு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்படிக்கப்படும் என கூறி கும்பமேளா கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.
 
நதிக்கரையில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் அதிகப்படியான கூட்டம் இருப்பதால் விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்க முடியவில்லை. எதார்த்தத்தில் அது சாத்தியமும் இல்லை" என ஐஜி சஞ்சய் குஞ்சியால் கூறியுள்ளார்.
 
இந்த இரண்டு மாத கும்பமேளா கொண்டாட்டத்தில் ஏப்ரல் 12 திங்கட்கிழமை சோம்வதி அமாவாசை நாள் தான், மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இன்று அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆரம்பத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்கள் மட்டுமே கும்பமேளா திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என அரசு கூறியது. கடுமையான கொரோனா விதிமுறைகள் மற்றும் சமூக இடைவெளி போன்றவைகள் கடைபிடிக்கப்படும் என கூறப்பட்டது.
 
ஆனால் சில முக்கிய சாமியார்களுக்கும், திருவிழாவில் பங்கெடுத்த சில பக்தர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே திங்கட்கிழமை புனித நீராட்டத்தில் கொரோனா இன்னும் அதிவேகமாக பக்தர்களுக்கு பரவும் என்கிற பயம் அதிகரித்திருக்கிறது.
 
அதோடு இக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களில் சிலர் கொரோனா வைரஸை தங்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல கூட வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்பட போதுமான படுக்கைகள் இல்லை எனவும், உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன.
 
இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்படுபட்டவர்கள் எண்ணிக்கையில், 30 - 40 சதவீதம் பேர் மகாராஷ்டிரத்தில் உள்ளது. இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசு, கும்பமேளா திருவிழாவுக்கு அனுமதி கொடுத்தது நிபுணர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
 
கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில் நிலைமை இன்னும் மோசமடையும் எனக் கூறுகிறார்கள் நிபுணர்கள். இதில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் அடக்கம். இதுவரை இந்தியாவில் 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்துகள், மக்களுக்குச் செலுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் கொரோனா பரவலைத் தடுக்க, மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இன்னும் வேகப்படுத்த வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.